திருச்சுழி பகுதியில்  287 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்

திருச்சுழி பகுதியைச் சேர்ந்த 287 பயனாளிகளுக்கு ரூ.78.87 லட்சத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.
Updated on
1 min read

திருச்சுழி குதியைச் சேர்ந்த 287 பயனாளிகளுக்கு ரூ.78.87 லட்சத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.

    விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி அருகே சென்னிலக்குடியில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமிற்கு நில நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை ஆணையாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமை வகித்தார். ஆட்சியர் வே.ராஜாராமன் முன்னிலை வகித்தார். இதில், செய்தி மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.

   இதில், வருவாய்த்துறை அமைச்சர் பேசுகையில், பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் முதல்வர் பல்வேறு திட்டங்களை  செயல்படுத்தி வருகிறார். அதில், கிராம மக்கள் எளிதாக நலத்திட்ட உதவிகள் பெறும் வகையில் அம்மா திட்ட முகாம் வாரந்தோறும் கிராமங்களில் நடத்தப்படுகிறது. இம்முகாமில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்று உடனே பரிசீலித்து உதவிகளும் வழங்கப்படுகிறது. இம்மாவட்டத்தில் முதல் கட்டமாக 357 கிராமங்களில் 83,913 மனுக்கள் பெறப்பட்டு 54,316 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதேபோல், 2-ம் கட்டமாக 406 வருவாய் கிராமங்களில் 29015 மனுக்கள் பெறப்பட்டு 20969 மனுக்களுக்கும், 3-ம் கட்டமாக 220 வருவாய் கிராமங்களில் 12,598 மனுக்கள் பெறப்பட்டு 8821 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

     செய்தி மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் பேசுகையில், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் விலையில்லா பொருள்களும், பெண்களின் நலன் கருதி தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவித் தொகையும் வழங்கப்படுகிறது.  கிராமங்களில் உள்ள பொதுமக்கள் வாழ்வாதாரம் பெறும் வகையில் ஆடுகள், கறவை மாடுகளும் வழங்கப்படுகிறது. இதேபோல், பல திட்டங்களில் ஏதாவது ஒரு திட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்தினரும் பயனடைந்து வருவதாக அவர் குறிபிட்டு பேசினார்.

இம்முகாமில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை, இறப்பு மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகை, நலிவடைந்தோர் உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டைகள், பட்டா பெயர் மாற்றம் மற்றும் பட்டாமாறுதல் உள்பட மொத்தம் 287 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினார்கள்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் செ.முனுசாமி, அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் சுபாநந்தினி, ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்கள் இந்திராமோகன்(திருச்சுழி), வேலாயுதம்(சாத்தூர்), சுப்பிரமணியன்(சிவகாசி),  வட்டாட்சியர் ராமநாதன், ஊராட்சி தலைவர் கு.சந்திரா உள்பட பலர் பங்கேற்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com